Saturday, March 12, 2016

எதை விடுவது

எதை விட்டு விடுவது
எதை பிடித்துக் கொள்வதென
எதுவும் புரியவில்லை...
விட்டு விடவும்
பிடித்துக் கொள்ளவும்
ஏதோ ஒன்று
இருக்கவேண்டுமல்லவா???

தீர்மானம்

இந்த மௌனத்தை 
எந்த இரைச்சல் உடைத்தெறிய
போகிறதென்று தெரியவில்லை... 
ஆனால் அதையும் 
இந்த மௌனம்தான் 
தீர்மானித்து வைத்து
காத்துக் கொண்டிருக்கிறது...

காரணம்

அழ வேண்டுமா அழு
சிரிக்க வேண்டுமா சிரி... 
கோபமா... ஆற்றாமையா...
வெறுமையா... மகிழ்ச்சியா... 
ஆனால் - இவை
எல்லாவற்றிற்கும் முன்னால்
ஏன் எதையோ ஒன்றை அதற்கான
காரணமாக சித்தரித்துக் கொள்கிறாய்???

மௌனமெனும் வார்த்தைகள்

ஒரு உயர்ந்ததொரு
மௌனத்தின் உச்சியில்
அமர்ந்திருக்கிறது...
உனக்கும் எனக்குமான
பேசப்படாத வார்த்தைகள்...
சில நேரம் அந்த வார்த்தைகளை
நான் உச்சரித்துப் பார்க்கிறேன்...
நீ அப்பொழுதும் என் முன்
மௌனமாய் நிறைந்திருக்கிறாய்...
உன் பதிலில்லா ஒவ்வொரு
மௌனத்தின் பின்னணியிலும்
நான் உன்னை விட்டு மெல்ல மெல்ல
விலகி நடந்து கொண்டிருக்கிறேன்...
என்றாவது ஒரு நாள்
நீ அந்த பேசப்படாத வார்த்தைகளை
உச்சரிக்கும் போது - நான் அதை
கேட்க இயலாத தொலைவில்
நடந்து கொண்டிருப்பேன் - உன்
பொய்யானதொரு மௌனத்தை சுமந்தபடி...

என்ன ?

எது நடந்தால் என்ன? 
எதுவும் நடக்காவிட்டால்தான் என்ன? 
எல்லா பாதைகளும் முடிவில்
மரணத்தை நோக்கித்தானே
நீண்டு கொண்டிருக்கின்றன !!!

காத்திருக்கிறான் !!!

இன்னும் எத்தனை முறை
இந்த புத்தகத்தின் பக்கங்களை திருப்ப
வேண்டுமென தெரியவில்லை...
திரும்ப திரும்ப 
திருப்பிக் கொண்டேயிருக்கிறேன்...
என்னை தொடர்ந்து அதை முதலிலிருந்து
திருப்புவதற்காக - இன்னொருவன்
எப்போதும் காத்துக் கொண்டேயிருக்கிறான் !!!

கடந்து செல்லும்

இதையும் தாண்டி
எப்படி செல்ல முடியும் - என
தோன்றுகிறது...
முடியவில்லை என்றாலும் 
பரவாயில்லை...
அது தானாகவே
கடந்து சென்று விடும்...

ஒவ்வொரு முறையும்

ஒவ்வொரு முறை
உன்னை பார்க்கும் போதும்
எனக்குள் பரபரப்பான
மாற்றங்கள்...
கண்கள் துடிக்கிறது...
இதயம் படபடக்கிறது...
கைகள் பரபரக்கிறது...
கால்கள் குறுகுறுவென தவிக்கிறது...
நினைவுகள் நிற்க நேரமின்றி தகிக்கிறது...
இப்படி, எனக்குள்ளாக ஓரு
உலகளாவிய ஓட்ட பந்தயமே
நடக்கிறது...
ஆனால் அந்த பந்தயத்தில்
ஒவ்வொரு முறையும் - நீதான் முதலிடம்
பிடித்து என்னை கடந்து
மெல்ல நடந்து சென்று கொண்டிருக்கிறாய் !!!

மௌனம் !!!

ஒரு மௌனத்தால் 
அதிகபட்சம் என்ன செய்துவிட
முடியும்? 
ஒரு பேரிரைச்சலை
தன்னுள் அடக்குவதை தவிர !!!!

எப்படி எடுத்துக் கொள்வதென

இதை எப்படி
எடுத்துக் கொள்வதென
தெரியவில்லை...
எதை பற்றி எழுதுகிறேன்
என யாருக்குமே தெரியாதுதான்...
ஏனேனில் அது எதைப் பற்றியென
எனக்கே தெரியவில்லை...
ஒரு வேளை எனக்கு தெரிந்திருந்தால்
இதை எழுதியிருக்க மாட்டேனோ என்னவோ...
இருந்தாலும் இதை
எப்படி எடுத்துக் கொள்வதென
தெரியவில்லை...

எதுவும்

எதுவும் புரியாதவரை
எல்லாமும் சரியாகத்தான்
சென்று கொண்டிருக்கிறது... 
புரிந்துகொள்ள முயற்சிக்கும் போதுதான்
தவறுகள் ஆரம்பமாகிறது !!!