அழ வேண்டுமா அழு சிரிக்க வேண்டுமா சிரி... கோபமா... ஆற்றாமையா... வெறுமையா... மகிழ்ச்சியா... ஆனால் - இவை எல்லாவற்றிற்கும் முன்னால் ஏன் எதையோ ஒன்றை அதற்கான காரணமாக சித்தரித்துக் கொள்கிறாய்???
ஒரு உயர்ந்ததொரு மௌனத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறது... உனக்கும் எனக்குமான பேசப்படாத வார்த்தைகள்...
சில நேரம் அந்த வார்த்தைகளை நான் உச்சரித்துப் பார்க்கிறேன்...
நீ அப்பொழுதும் என் முன் மௌனமாய் நிறைந்திருக்கிறாய்...
உன் பதிலில்லா ஒவ்வொரு மௌனத்தின் பின்னணியிலும் நான் உன்னை விட்டு மெல்ல மெல்ல விலகி நடந்து கொண்டிருக்கிறேன்...
என்றாவது ஒரு நாள் நீ அந்த பேசப்படாத வார்த்தைகளை உச்சரிக்கும் போது - நான் அதை கேட்க இயலாத தொலைவில் நடந்து கொண்டிருப்பேன் - உன் பொய்யானதொரு மௌனத்தை சுமந்தபடி...
இன்னும் எத்தனை முறை இந்த புத்தகத்தின் பக்கங்களை திருப்ப வேண்டுமென தெரியவில்லை...
திரும்ப திரும்ப திருப்பிக் கொண்டேயிருக்கிறேன்... என்னை தொடர்ந்து அதை முதலிலிருந்து திருப்புவதற்காக - இன்னொருவன் எப்போதும் காத்துக் கொண்டேயிருக்கிறான் !!!