Friday, December 6, 2013

மௌனத்தின் இரு பக்கங்கள் !!!

உன் மனதைப் போல
என் மௌனத்திற்கும் 
இரண்டு பக்கங்கள் இருக்கின்றன !

ஒரு பக்கம் உனக்கும் எனக்குமான
சந்திப்பின் புன்னகைகள்... 

மறு பக்கம் நீ இல்லாத போது
உன் நினைவோடு கரையும்
என் கண்ணீர் துளிகள்... 

விளையாட்டுப் பிள்ளை
ஒரு ரூபாய் நாணயத்தை
சுண்டி விளையாடுவது போல் - நீ
என் மௌனத்தை சுட்டு விரலால்
சுண்டி விடுகிறாய்...

ஐயோ... ஐயோ...

அது சுற்றி சுற்றி கடைசியில்
எந்தப் பக்கம் விழப் போகிறதோ
என்றதொரு பயத்தில் என் உயிரை
கையில் பிடித்தபடி காத்திருக்கிறேன்...

ஒத்தையடிப் பாதை ???

இது ஒத்தையடிப் பாதை
திரும்பிப் பார்க்காதே என்று
சொல்கிறார்கள்...

உண்மைதான்...
ஆனால் யார் சொல்வதைக் 
கேட்டிருக்கிறார்கள் - நான் 
அதைக் கேட்பதற்கு... 

ஆனால் 
நான் திரும்பிப் பார்த்த கணம்
நான் நடந்த பாதையின் சுவடே
இருப்பதில்லை என்பதைக் கண்டு கொண்டேன்...

வெற்றிடத்தின் வாசல் எங்கே?

ஏனோ தெரியவில்லை... 

சில காலமாய் மனம் முழுவதும் 
வெறுமை புகுந்து 
விளையாடிக் கொண்டிருக்கிறது... 

முன்பெல்லாம் அதற்கென 
காரணங்கள் இருக்கும்... 

ஆனால் இப்போது காரண காரியமற்ற 
வெற்றிடம் ஒன்று
தானாக எனக்குள் தன்னை
உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது...

இதில் வேடிக்கை என்னவெனில்
அவ்வெற்றிடத்தை என்னால் கூட
நெருங்க முடியவில்லை என்பதுதான்...

எதுவெனத் தெரியாமல் !!!

ஒவ்வொரு முறையும் 
எனக்குப் பிடித்தமான ஒன்று 
என்னை தாண்டிச் 
சென்று கொண்டேயிருக்கிறது... 

எட்டிப் பிடிக்க எத்தனிக்கிறேன்... 
ஆனால்
இந்த இயற்கை என்னை 
பார்த்து புன்னகை பூக்கிறது... 

நான் எதற்காகாக உன்னை தயார்படுத்துகிறேன்
எனத் தெரியாமல் நீ எதற்கோ
ஆசைப் படுகிறாயே என்பது போல்...

Tuesday, November 26, 2013

கோபமாய் நீயும் அன்புடன் நானும் !!!

நான் பிறந்து இந்த 
மண்ணில் விழுந்த - அதே நேரத்தில்
எனக்குள்ளும் ஒரு குழந்தை பிறந்தது... 

அவ்வப்போது 
எனக்குள் வளரும்
அந்த குழந்தையை 
களவாடும் நோக்கிலோ
காயப்படுத்தும் நோக்கிலோ 
நீ அவதாரம் எடுக்கிறாய்... 

ஏன் சில சமயம் அதை
கொன்று போடவும் செய்கிறாய்...

எத்தனை முறை நீ கொன்றாலும்
மீண்டுமொரு குழந்தையை
உயிர்ப்பிக்கும் வல்லமை பெற்றவன் நான்...

ஒன்றை மட்டும் நீ உணர்ந்து கொள் !!!

மீண்டும் மீண்டும் கொல்வதால்
நீ பலவீனமாகிக் கொண்டிருக்கிறாய்
மீண்டும் மீண்டும் உயிர்ப்பிப்பதால்
நான் பயமற்றவனாகிறேன்...

உன் களவாடும் புன்னகை

யாருக்கும் தெரியாமல்
யாரோ என்னை களவாடியது 
போன்றதொரு உணர்வு... 

சட்டென நிமிர்ந்தேன்... 

மென் புன்னகையுடன் 
என்னை உற்றுப் பார்த்தவாறு
உன் தோழிகளுடன்
நீ நடந்து செல்கிறாய்...

Saturday, November 23, 2013

தூக்கமும் நீயும்

தூக்கம் வரும் போதெல்லாம்
என் அருகில் இருளின் 
இன்னொரு பிம்பமாக - நீ 
வந்தமர்ந்து கொள்கிறாய்... 

நான் தூங்குவதா... 
இல்லை உன்னையே
பார்த்துக் கொண்டிருப்பதா ??? 

எப்போதும் போல என் இந்த
கேள்விக்கும் உன் காந்தக் கண்களை
உருட்டிக் காண்பிக்கிறாய்...

உன் கண்களின் இமை
விளிம்பில் என் தூக்கம் - 

நொடிப்பொழுதில்  தூக்கிலேற்றப்படுகிறது....

முட்டாள்தனமான பதில் !!!

நீ பஸ் வராமல் 
தவித்ததொரு வேளையில்
எனக்கான பஸ் வந்தாலும் 
உன்னை விட்டு விட்டு 
எப்படி என -அதில்
ஏறாமல் ஏதோவென்பது போல்
உன்னைப் பார்த்து 
“இதுவல்ல எனது பஸ்” 
எனச் சொல்வேன்...

முட்டாள்தனமான பதில்தான்...
ஆனால் நீ அதற்குத்தான்
சிரித்து வைப்பாய்...

எங்காவது புத்திசாலித்தனமான
வார்த்தைகளுக்கு உன் போன்ற
பெண்கள் சிரித்திருக்கிறார்களா என்ன???

ஆறுதல் பெண்ணே

நான் அழும் நேரத்திலெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது... 
என் அழுகைக்கு பின்னால் 
வரும் அழகானதொரு அமைதியாய் 
என்னை தழுவிக் கொள்ள 
நீ ஒரு போதும் தயங்குவதில்லை !!!

அதிர்வுகள்

யாரோ சொல்வது போல்
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்... 
யாரோ அதை கேட்பது போல்
கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.... 

யாராவது சொல்லி
யாராவது கேட்டு - இங்கே
யாரவது அதன்படி 
நடந்திருக்கிறார்களா என்ன??? 

என்னைப் பொறுத்தவரை
சொல்லப்படுவதும்
கேட்கப்படுவதும்
இயற்கையின் இயல்பானதொரு
அதிர்வின் வெளிப்பாடே... 

நாம் வாழ்வது இந்த உலகத்தில் என்று 
எண்ணப்படுவதாய் கருதப்படும் வேளையில்
இங்கே உலகம் என்பது - நமக்கு
ஆறறிவு இருக்கிறது என்ற
மமதையில் நாம் அதற்கு 
வைத்துக் கொண்ட பெயராகவே
எனக்குத் தோன்றுகிறது... 

யாருக்கும் யாவும் 
தெரிந்திருக்க வேண்டும் 
என்றதொரு முனைப்புடன் 
இங்கே செயல்படும் போது... 

இயற்கை என்று கருதப்பட்ட 
கண்களால் அடக்க முடியாத
இந்த பரந்த பசுமையான மற்றும் 
உலர்ந்த பெரு வெளி 
அவ்வப்போது பல அதிர்வுகளில்
தன் வெளிப்பாட்டை இடைவிடாமல்
நமக்கு உணர்த்தியவாறே இருக்கிறது.... 

அதிர்வு என்றால் பூகம்பம்தான்
என்று நினைப்பவர்களுக்கெல்லாம் - என் செய்வேன்??? 
தனக்குள் மட்டும் அதிர்ந்தவாறு
ஒரு பூ பூப்பது கூட - இந்த இயற்கை
தருவிக்கும் அதிர்வின் வெளிப்பாடுதான்
என்பதை எப்படி புரியவைப்பது... 

பூ மட்டுமல்ல... 
தோன்றியதாக
எண்ணப்பட்ட யாவையும் - ஏன்
படைப்பிலேயே உயர்வானது
உன்னதமானதென நமக்கு நாமே
மார்தட்டிக் கொண்டிருக்கிற

ஆறறிவு அதிசயம் என அடிக்கடி
அழுத்தமாக பிதற்றபட்டுக் கொண்டிருக்கிற - நாம் கூட 
அதிர்வுகளின் அழுத்தத்தில்தான் 
தோற்றுவிக்கப்பட்டோம் என்பதை 
இந்த இயற்கை எப்போதும் 
உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறது... 

கள்ளி

நீ வந்து போன
கண நேர நிகழ்வுகளில்
எனக்குள் மௌனங்களின் பேரலை

என் மௌனச் சுவரில்
அங்கங்கே உன் 
பெயரை கிறுக்குகிறேன்... 

குழந்தையின் கை விரல்களில்
இருந்து பிடுங்குவது போல்
என்னிடமிருந்து - சில 

மென் அதிர்வுகளோடு - உனக்கான
காதலை நீ பிடுங்கிக் கொண்டாய் !!!!

நேற்று இன்று நாளை

நேற்று உன் கண்களில்
உன்னைப் பார்த்தேன்
இன்று உன் கண்களில்
என்னைப் பார்த்தேன்

நாளை ?... 
ஒரு வேளை நம் கண்கள் 
வழியாக இந்த உலகம்
தன்னையே பார்த்துக் கொள்ளுமோ ???

மௌனங்களின் கூர்வாள்கள்

யாரிடம் எப்படி பேச வேண்டும்
யாரிடம் எவ்வளவு இடைவெளி விட வேண்டும்
யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்... 

நீ நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்
என அப்பா சொல்லும் போதெல்லாம்
மெலிதாக சிரித்துக் கொண்டு போய் விடுவேன்... 

ஒரு மரம் போல்
ஒரு பறவை போல்
ஒரு மிருகம் போல்
நான் ஒரு உயிர் - அவ்வளவே...

சந்திக்கும் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு முகம் காட்டி
ஒவ்வொரு வேஷம் காட்டி
என்னை வெளிப்படுத்த வேண்டிய
அவசியத்தை என் படைப்பின் மூலமான
இந்த இயற்கை
ஏன்னில் ஏற்படுத்தியதேயில்லை...

என்னைப் பற்றிய
என் வாழ்வின் சூழலோடு
என்னைச் சுற்றியிருப்பவர்களின்
வார்த்தைகளின் அர்த்தங்கள் என் சுயத்திற்கு
முற்றிலும் புறம்பானதாக இருக்கிறது...

எனது சுயத்தின் பிம்பமும்
அவர்களுக்குள் ஞாபகமாய் இருக்கும்
எனது பிம்பமும்
பொருந்துவதேயில்லை...

3 வருடங்களாய், 6 வருடங்களாய்
என் பிம்பத்தை ஏதோ ஒரு சூழ்நிலையில்
அவர்களின் வெவ்வேறு தருணங்களில்
வரும் உணர்ச்சிகளோடு சேர்த்து
உள்வாங்கிக் கொண்டு அதை வைத்து
என்னை வரையறுக்கிறார்கள்....

32 வருடங்களாய் என்னை எனக்குத்
தெரிந்திருக்கும் தருணத்தில் - எனக்குள்
இடையில் வந்து பின் இடையில் போன
இவர்களுக்கென்ன அருகதை இருக்கிறது
என்னைப் பற்றி வரையறுக்க !!!

அவர்களுக்கெல்லாம் எப்போதும்
என்னிடமிருந்து வரும் பதில்
என் மௌனங்கள்தான்...
ஆனால் அந்த மௌனங்கள் ஒவ்வொன்றும்
பல அழகிய கூர்வாட்களாய்
பட்டை தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Wednesday, October 2, 2013

முடிவிலா நிலை வேண்டும்

விழிகளற்றவன் போல்
நடக்கிறேன்... 

மொழிகளற்றவன் போல்
அசைகிறேன்... 

செவிகளற்றவன் போல்
மௌனிக்கிறேன்... 

உணர்வுகளற்றவன் போல்
அவதானிக்கிறேன்...

உடலற்றவன் போல்
மிதக்கிறேன்...

உயிரற்றவன் போல்
உறைகிறேன்...

காலம் தாண்டி காற்றோடு
பயணிக்க விரும்புகிறவனாய்
என் காலத்தை மௌனமாக
யாசித்துக் கொண்டிருக்கிறேன்...

Wednesday, September 18, 2013

மௌன நிலை...

யாரும் யாவையும்
எதற்காகவும் யாருக்காகவும்
காத்திருப்பதில்லை...

நான் மட்டும் யாருக்காகவோ, எதற்காகவோ
காத்திருக்க வைக்கப்படுகிறேன்....

ஆனால்

என்னைப் பொறுத்தவரை
காத்திருத்தல் என்பது என்னைச் சூழ்கின்ற
புற இயல்புகளையோ,
புற வெளிப்பாடுகளையோ
பொறுத்தல்ல...

அது முற்றிலும் என்
உள் முக பயணமாயிருக்கிறது...

அது ஒரு
விடியாத இரவைப் போல
இருளாத பகலைப் போல

தன்னை நீட்டித்து கொண்டிருக்கும்
பலவிதமான நினைவுகளில்
சஞ்சரிக்கும் மௌன நிலை... 

ஏன் இப்படி கற்றுக் கொடுக்கப்பட்டது ???


இதெல்லாம் சேமித்து வை... 
எதிர்காலத்தில் உதவும்... 
எதிர்காலத்தில் நீ ஜொலிப்பாய்... 
எதிர்காலத்தில் நீ பெரிய ஆளாவாய்...

இப்படியெல்லாம் இருந்தால்
எதிர்காலத்தில் நீ வீணாவாய்
எதிர்காலத்தில் நீ பைத்தியமாவாய்
எதிர்காலத்தில் நீ சின்னாபின்னமாவாய்

தொடர்ந்து விடாப்பிடியாக
எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட

இந்த எதிர்காலம் எனப்படுவது யாது?
அது எங்கே இருக்கிறது?
அதன் எல்லைகள் எதுவரை ?

இந்த கேள்விகள் என் முன்
எதிர்படும் இந்த இயற்கையின்
எல்லா பதிவுகளிலும்
தன்னை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது...

அகன்று பரந்து விரிந்திருப்பதாய்
எண்ணப்படும் இந்த உலகில்
சிலர் பிறப்பதை நான் பார்க்கிறேன்...
சிலர் இறப்பதையும் நான் பார்க்கிறேன்...

இன்னொருவரின் பார்வையில்
அந்த சிலருக்குள் ஒருவராய் - நானும்
அடங்கி விடுகிறேன்...

இதில் இந்த எதிர்காலம் எனப்படுவது யாது???

Wednesday, September 11, 2013

இன்னும் எத்தனை தூரம் ???

இன்னும் எத்தனை தூரம் 
இந்தப் பயணம்... 

பயம் அற்றுப் போகிறேன்... 
பற்று இற்றுப் போகிறேன்... 

விடுதலையின் அர்த்தம் 
விழிகளில் வழிய
எதிர்படும் நிமிடங்களை 
சிறு புன்னகையுடன் கடந்து கொண்டிருக்கிறேன்... 

இதற்கு முன்னும்
இதற்கு பின்னும்
வந்தேனா - வருவேனா
எனக்குத் தெரியாது...

ஆனால் வந்தது போலும்
வருவது போலும் எண்ணங்கள்
எனக்குள் தன்னை கிளை பரப்புகின்றன...

தற்சமயம் எனக்குள்ளே
நான் கேட்காமல் எழுந்த கேள்வி

இன்னும் எத்தனை தூரம்
இந்தப் பயணம் ?

?????

கேள்விகள்... கேள்விகள்... கேள்விகள் !!!!!!!


இயல்பும் இயல்பற்ற நிலையும் 
மாறி மாறி எனக்குள்... 

விடுதலையாய் சிலிர்க்கும் போதெல்லாம்
சிறைபட துடிக்கிறேன்... 
சிறைபட்ட நேரங்களில் விடுதலை உணர்வுகளால்
தகிக்கிறேன்... 

இதற்கு முன் ”நான்” இருந்தேனா...
இதற்கு பின் ”நான்” இருப்பேனா...
இப்போது ”நான்” -தான் இங்கே இருக்கிறேனா...

ஆமாம்... அது என்ன ”நான்”...
ஒருவேளை அது இந்த பிரபஞ்சத்தில் இருக்கும்
கோடான கோடி உயிர்களுக்கே உரித்தான
பொதுவான ”நான்” -ஆக இருக்குமோ....

அந்த “நான்” -தான் எனக்குள்ளும்
தன்னை செருக்குடன் - இருமாப்புடன்
தன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கிறதோ???

நடுவில் முளைத்த ஆசை

பிறத்தல்... 
வாழ்தல்... 
இறத்தல்... 
இவைகளுக்கு நடுவே ஏன்
உனக்கு மட்டும் இந்த ஆசை? 
இதில் இந்த வாழ்வென்றால் என்ன
என்றதொரு கேள்வி வேறு???

நான் ???

ஒரு செல் உயிரி
பல செல் உயிரி
செடி, கொடி, 
மரங்கள்... 

இவையனைத்தும் நான் என்ற 
திமிருடன் வளர்ந்து தன்னை
வெளிப்படுத்துகின்றன... 

ஏன்... நீ - நான்
என்ற செருக்குடன் வளர்ந்திருக்கிறாய்
நான் - நான் என்ற செருக்குடன்
வளர்ந்திருக்கிறேன்...

தோன்றியன யாவும் மறைவன
என்னும் விதிப்படி உடற்கூறுகளும்
உருவங்களும் மறைந்து போகலாம்...

ஆனால் இந்த ”நான்”
இந்த உலகத்தின் படைப்பாற்றல்
அற்றுப் போகும் வரை

வெவ்வேறு வடிவங்களில்
வெவ்வேறு தன்மைகளில்
அடக்க முடியா திமிருடன்
தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது...

முடிவிலா எல்லை எது???

முடிவிலா எல்லை
என் முன் விரிந்திருப்பதாய்
எனக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது... 

தேடியதும்... தேடப்படுவதும்... தேடிக் கொண்டிருப்பதும்
கைக்கிட்டும் நேரத்தில் எதுவுமே தேவைப்படும் 
நிலையில் இருப்பதேயில்லை... 

அர்த்தமற்ற வாழ்வெனவும்
அர்த்தமுள்ள சாவெனவும்
பிரகடனப்படுத்துகிற சூழ்நிலையிலெல்லாம்
நான் நடுக்கத்துடனே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...

ஒரு மரணம் உணர்த்துவதை
ஒரு ஜனனம் கற்பிப்பதை
இரண்டையும் இணைத்துக் கொண்டிருக்கிற
இந்த வாழ்வு சொல்ல தவறிக் கொண்டிருக்கிறது...

இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்...

முடிவிலா எல்லை என்
முன்னால் விரிந்திருக்கிறதென
எனக்கு கற்பிக்கப்பட்டதை...

நான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்... !!!

நானென்ற நானற்ற பிம்பங்கள் !!!

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும்
எதையாவது ஒன்றை 
என்னுள் பதிவு செய்கின்றன... 

தினசரி ஓட்டங்களுக்குள் 
சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற
ஒவ்வொரு நொடிக்குள்ளும்
நான் தவித்து தகிக்கின்றேன்

நான் பார்த்த மனிதர்கள்
நான் பேசின வார்த்தைகள்
நான் பழகிய கடவுள்
நான் பரவசப்பட்ட இயற்கை

இப்படி என்னற நான்
என்ற நானுக்குள் - நான்
சிக்கித் தவிக்கும் போது
எனக்குள் நானாய் வந்தமர்ந்த
இந்த எல்லா பிம்பங்களும்
என்னை பார்த்து
கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன !!!

முடிவில்லா இம்சையடி நீ...

பார்ப்பதுமாய் பார்க்காததுமாய்
பேசுவதுமாய் பேசாததுமாய்
முறைப்பதுமாய் சிரிப்பதுமாய்
சிலிர்ப்பதுமாய் சிலாகிப்பதுமாய்
இருப்பதுமாய் இல்லாததுமாய்
முடிவதுமாய் தொடங்குவதுமாய் - என்
முடிவில்லா இம்சையடி நீ !!!

யாரோ யாரிடமோ !!!

யாரோ யாரிடமோ

ஞாபகப்படுத்தபடுகிறார்கள்... 

உரையாடுகிறார்கள்... 

சிரித்து மகிழ்ந்திருக்கிறார்கள்... 

அழுது புலம்புகிறார்கள்... 

ரகசியம் பேசுகிறார்கள்...

மௌனமாய் இம்சிக்கிறார்கள்...

இப்படி யாரோ யாரிடமோ
யாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்க

காலம் இந்த யாரையும்
பொருட்படுத்தாது முன்னோக்கி
தனது - முடிவிலாததொரு
பயணத்தை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது...

கேள்விகளின் கணம்

இதெல்லாம் எதற்கு நடக்கிறது 
என்பது தெரியாமலே நடந்தேறுகிறது... 

முதலில் ஏன் நடக்கிறது
என்ற எண்ணம் மேலோங்க
எனக்குள் தகிக்கிறேன்... 

இறுதியில் நல்ல வேளை
இப்படி நடக்காமல் போயிருந்தால் என்னவாயிருக்குமோ
என்று தோன்றுகிறது... 

ஏன் இப்படி நடக்கிறது, நடந்தது,?
இவையெல்லாம் எந்த கணத்தில் நிர்மாணிக்கப்படுகிறது?

ஒரு பிறப்பும் இறப்பும் யார் கையிலும் இல்லாத போது
இடையில் நடப்பது மட்டும் கை கூட வேண்டுமென்ற
ஆசையின் பயம்தான் இந்த கேள்விகளின் கணம்....

மழையும் நீயும் ஒன்றல்லோ

இந்த மழைக்கும் 
உனக்கும் பெரும் தொடர்பிருக்கிறது போலும்... 

அடர்ந்த வெயில் பொழுதில்

நீ வந்தால்
மழை வாசம் வரும்... 

மழை வந்தால் - மனதில்
உன் வாசம் வரும். 

நீ அழைத்தால் உடனே வருவதில்லை...
மழையும் அப்படித்தான்...

சரி நீ போ என்றால்
போகிறேன் போகிறேன் என்று நின்று
பேசிக் கொண்டேயிருப்பாய்...
விடாமல் இருக்கும் தூரல் போல...

மழை பெய்து ஓய்ந்த போதும்
ஒட்டிக் கொண்டிருக்கின்ற ஈரம் போல

நீ சென்ற பின்னும்
என்னுடன் இருப்பதை போலவொரு
பிம்பத்தை செதுக்கிச் செல்கிறாய்....

இப்போது கூட மழை...
மனமெங்கும் பூக்களாய் பூக்கின்ற
உன் வாசத்தோடு அமர்ந்திருக்கிறேன்...

Thursday, March 21, 2013

சென்னப்பட்டனம் முதல் சென்னை வரை. .



நம் உலகத்தின் பாதை நம் வீட்டிலிருந்து துவங்குகிறது. வீட்டின் கலாச்சாரம் நம் ஊரை செப்பனிடுகிறது. நமது சுவாசம் நம் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. நமது எண்ணங்கள் நம் ஊர் முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. நாம் வசிக்கும் ஊரின் எல்லா திசைகளிலும் நம் உணர்வுகள் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் நாம் வசிக்கும் ஊர்தான் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

ஆனா பாருங்க நாம எந்த ஊர்ல வசிக்கிறோமோ அந்த ஊரப் பத்தி தெரிஞ்சி வச்சிக்கறதுல்ல…

அதாங்க… இருக்கறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப் படறது மாதிரி – நம்ம ஊரப் பத்தி தெரிஞ்சுக்காம எங்கியோ நம்ம கலாச்சாரத்துக்கு அப்பாற்பட்டு, மொழிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கிகிட்டு இருக்குற இன்னொரு ஊரப்பத்தி தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம். அதுவுமில்லாம யாரோ சொல்றத கேட்டுட்டு, பல புத்தகங்கள்ல படிச்சிட்டு அந்த ஊருக்கு போறதுக்காக ஏக்கத்தோட அலைஞ்சிட்ருக்குறோம்…

எப்பவுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதானேன்னு நீங்க உங்களுக்குள்ளாவே முணுமுணுக்கறது எனக்கு கேக்குது.. இருந்தாலும் இக்கரைய பத்தி தெரிஞ்சுக்கணும்ல…

பொதுவா இப்பலாம் நாம சென்னைய ரொம்ப செல்லமா சிங்காரச் சென்னைன்னு சொல்வோம். ஆனா அதுக்கு முன்னாடி இந்தச் சென்னைக்கு என்னென்ன பெயர் இருந்துச்சின்னு உங்களுக்குத் தெரியுமா… இதோ அதோட வரலாற கொஞ்சம் பாப்போம்.

சென்னப்பட்டனம் உருவான கதை… 
பொதுவா சென்னையை தமிழின் தலைநகரம்னு சொல்லலாம். எத்தனையோ மொழிகள் வந்தாலும் சரி, எத்தனையோ கலாச்சாரங்கள் இவ்விடத்தில் வந்து பஞ்சம் பிழைப்பது போல் தஞ்சமைடந்தாலும் சரி, சென்னை என்றவுடன் தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும்தாங்க முன்னோங்கி நிற்கும்.

நாமெல்லாம் இன்னிக்கு சில நேரம் ஆர்வமா, சில நேரம் அன்பா, சில நேரம் இரைச்சலா, சில நேரம் எரிச்சலா, பல நேரம் பிரமிப்பா பார்த்துக் கொண்டிருக்கிற இந்த சென்னை தன்னை உருவாக்கிக் கொள்ளும் காலகட்டத்தில் ஒரு சிறிய கிராமமாக இருந்ததென்றால் அது உங்களுக்கெல்லாம் ஆச்சரியமான ஒன்று.

நம்மால் செல்லமாக அழைக்கப்படும் இந்த சிங்காரச் சென்னை ஆகஸ்ட் 22, ஆண்டு 1639 ஆண்டு தன்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. அன்றுதான் அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் என்பவர்கள் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே மற்றும் கோகன் என்பவர்களிடம் அவர்கள் காலத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை மானியமாக வாங்கிக் கொண்டதாக பதிவுகள் கூறுகின்றது.

அந்த காலகட்டத்தில் இந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதி சென்னப்பசவ நாயக்கன் என்பவரால் ஆண்டு வரப்பட்டது. இந்த சென்னப்பசவநாயக்கனின் புதல்வர்கள்தான் அய்யப்பனும், வேங்கடப்பனும். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் தந்தை பெயரின் நினைவாக இந்தக் கோட்டையின் வடக்கே இருக்கும் பகுதிகள் சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்டது.

சென்னப் பட்டணம் – சென்னப்பசவ நாயக்கன் என்பவரின் பெயரிலிருந்து உருவாக்கப்பட்டது.

அன்றிலிருந்து சுமார் ஓராண்டு கால கட்டத்தில் இந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கிழக்கிந்தியக் கம்பெனிகாரர்களால் 1640 ஆண்டு ஏப்ரல் 23 ம் தேதி. கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கோட்டையை மையமாக வைத்து ஆங்கிலேயர்களின் கால் சென்னை மண்ணில் ஆழமாக வேரூன்ற ஆரம்பித்தது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ் பண்பாடு வஞ்சகத்தில் வீழ்ந்த வருடம் என்று கூட இதை வர்ணிக்கலாம். இதன் பின்பு 1658 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், சேத்துப் பட்டு, எழும்பூர் போன்ற கிராமங்கள் இதனுடன் இணைக்கப்பட்டன.

திருவல்லிக்கேணி


வத்தக்கொழம்பு வாசமும், சிக்கன் பிரியாணி வாசமும், காற்றில் பேச்சுலர்களின் சுவாசமும் திருவல்லிக்கேணியின் சாலைகளில் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு போகும். புதிதாய் மேன்ஷன் தேடியலையும் கண்கள், எளிதாய் தன்னை இங்கே உள்ளடக்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டும் எண்ணற்ற ஆண்கள் என இந்த திருவல்லிக்கேணி தன்னை சற்று கொஞ்சம் வித்தியாசமாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

திருவல்லிக்கேணி – அல்லிப் பூக்கள் நிறைந்த குளம் இருந்ததால் இது திரு – அல்லி – கேணி என்பதிலிருந்து மருவி திருவல்லிக்கேணி என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அதுவுமில்லாம நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து ஒரு பாசுரம் திருவல்லிக்கேணியைப் பற்றி பதிவு செய்திருக்கிறது.

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.

வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த திருவல்லிக்கேணி இன்றைய பேச்சுலர்களின் புகலிடமாக திகழ்கிறது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பார்த்தசாரதி கோயில் இந்த திருவல்லிக்கேணியில்தான் இருக்கிறது. மகாகவி பாரதியாரின் இறுதிக்காலத்தை தன் மடியில் வைத்து தாலாட்டிய பெருமையும் இந்த திருவல்லிக்கேணிக்கு இருக்கிறது.

புரசை வாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர்:


புரசைவாக்கம் என்பது புரசை பாக்கம் என்கிற பெயரிலிருந்து மருவி வந்திருக்கிறது. அன்று புரசைக் காடுகள் மண்டியிருந்த இடம் இன்று புரசைவாக்கமாக அழைக்கப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை இந்த இடம் வணிகத்திற்கு சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.

சேத்துப்பட்டு என்கிற பெயரைக் கேட்டவுடன் மெட்ராஸூக்கு வரும் எல்லோரின் மனதிலும் இது என்னடா ஊர் ”சேத்துப்பட்டு” என்றதொரு கேள்வி தொக்கி நிற்கும். என்னங்க நான் சொல்றது சரிதானே…

நம்ம தமிழ் கலாச்சாரத்துல மிக முக்கியமான ஒண்ணு மண்பாண்டம். மண்பாண்டம்னு கேட்டதும் இப்பலாம் எங்கங்க மண்பாண்டம் கெடைக்குது, மண்ணால செஞ்ச சிலைகளும், அழகுப் பொருள்களும்தாங்க இருக்குன்னு நாம எல்லாரும் நமக்குள்ளயே வெட்டிப் பேச்சு பேசிட்டு போய்டுவோம். இதத்தான் பாரதியார் அன்னிக்கே சொன்னார்

”கூட்டத்தில் கூடி நின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே
நாளில் மறப்பாரடி” 


கூட்டத்துல எங்கியோ ஒலிக்கிற ஒரு குரலா பேசறதோட சரி. அதப் பத்தி நம்ம யோசிக்கறதேயில்ல. சரி அதவிடுங்க… அந்த காலத்துல மண்பாண்டம் செய்கிற குயவர்கள் தாங்கள் மண்பாண்டம் செய்வதற்காக இந்த சேத்துப்பட்டில் வந்து வண்டி வண்டியாக செற்று மண்ணை எடுத்துக் கொண்டு செல்வார்களாம். அதனால் இந்த இடத்திற்கு சேத்துப்பட்டு என்று பெயர் வந்துச்சின்னு சொல்றாங்க. கேக்கறதுக்கே சுவாரஸ்யமா இருக்குல்ல.

சரி வாங்க எழும்பூரப் பத்திப் பாப்போம். சேத்துப்பட்டு பெயர் வந்தக் கதை அப்டின்னா எழும்பூர் பெயர் வந்தக் கதை வேறமாதிரி இருக்குங்க. பொதுவா நம்ம பசங்க ரோட்ல போற அழகான பொண்ண ரொம்ப ஆர்வமா பாப்பாங்க.. ஆனா இதுல வேடிக்கை என்னன்னா அந்த பொண்ணு யாரப் பாக்குது அப்டிங்கறதுதானே ரொம்ப முக்கியமான விஷயம்.

அதுமாதிரி இந்த உலகத்துக்கே முக்கியமான ஒரு சக்தில - ஒளிக்கு அதிக பங்குண்டு. அந்த வகையில சூரிய ஒளி எல்லாத்துக்கும் ரொம்ப முக்கியம். காலைல நாம சீக்கிரம் எழுந்தோம்னா – நம்ம வாழ்க்கைல சீக்கிரம் எழுந்திரிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் – என்னிக்காவது தப்பித் தவறி சீக்கிரம் எழுந்திரிச்சிட்டோம்னா சூரியன் கொஞ்சம் கொஞ்சமா மேல வர்றதப் பாக்க நமக்கு உற்சாகமா இருக்கும். இப்டி பீச்சுல, மொட்ட மாடில, பால்கனில நின்னுகிட்டு உற்சாகமா எழுந்து வர்ற சூரியனைப் பாக்க நாம பிராயத்தனப்படுவோம்.

நாம மட்டுமா என்ன…. இந்த உலகத்துல உயிரா ஜனித்திருக்குற அத்தனை ஜீவராசிகளும், செடி மரம், கொடிகளும், நிலப்பகுதிகளும் சூரிய ஒளிக்காகத்தான் ஏங்கிட்டிருக்கும். ஆனா பாருங்க இவ்வளவு பேரும் நேரடியாவோ, மறைமுகமாகவோ ஏங்கிட்டிருக்குற அந்த சூரியன் மொதல்ல எங்க தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறதென்பதுதான் ரொம்ப முக்கியம்.

அந்த வகையில பாத்தா நம்ம சென்னையில சூரியன் மொத மொதல்ல எழுகிற இடம்தான் எழும்பூர். தினமும் சூரியன் அந்த இடத்தில்தான் எழுகிறது என்பதற்காக அந்த இடத்திற்கு சூரியன் – எழும் – ஊர் என பெயர் வந்தது. நாளடைவில் அந்தப் பெயர் மாறி இன்று எழும்பூர் என அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி நம்ம சென்னைல நம்மள சுத்தியிருக்குற எல்லா ஊருக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்குங்க.


தொலைதூரமாக நீண்டு - இந்த
உலகத்தை சுற்றிக் கொண்டிருக்கும்
எனக்கான பாதைகள் - என்
வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறது.

எத்தனையோ யுகம் யுகமாய்
யார் யாரோ வாழ்ந்த சுவடுகள்
உணர்வுகள், எண்ணங்கள் – இந்த மண் வழி
என் மனதுக்குள் உயிர்பெறுகிறது…

சொல்லிப் புரியாத, கேட்டு அறியாத,
பார்த்து உணராத
பலவித எண்ணங்களை - எனக்குள்
இந்த நகரம் உயிர்ப்பிக்கிறது.

எனக்கான சில பதிவுகளை
இங்கே பதிவு செய்வதென நினைத்து
என்னையும் இந்த மண்ணோடு
தொலைக்கிறேன் - நான் வாழ்வதென்பது
நிச்சயமில்லையென்றாலும் - இந்த மண் 

என் நினைவுகளை சுமந்து வாழும் 
என்ற நம்பிக்கையுடன். . .